சேலம், ஜூலை 15 –
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
இந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய இருகாலூர் ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 1.38 லட்சம் மதிப்பில் பயனாளிக்கு பண்ணை குட்டை அமைக்கப்பட்டுள்ள பணியினையும், வடுகப்பட்டி ஊராட்சியில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் 2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து வடுகபட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கத்தின் அருகில் ரூ. 3.92 லட்சம் மதிப்பில் புளியன்யன், தேக்கு, கொங்கன் வேம்பு, நாவல், வாதன் ஊஞ்சல், மூங்கில், பூவரன் செர்க்கம் அனுசியர் என மொத்தம் 800 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார். மேலும் வடுகபட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை , குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குழந்தைகளின் எடை உயரம் சரியாக உள்ளதா என்பவை குறித்து அங்கன்வாடி பணியாளிடம் கேட்டறிந்து அந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியரிடம் கேட்டறிந்து மாணவ மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதேபோன்று வடுகப்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கை வசதி, பல்வேறு பிரிவுகள் ஆய்வகம், கர்ப்பிணி தாய்மார்கள் விவரம், மருந்தகம், கழிப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ வசதிகள், மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் சுகாதார நிலையத்தின் வளாகத்தில் 15 – வது மத்திய நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ரூபாய் 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அக்கம்மாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்படும் அறிவியலின் நியாய விலை கடையின் பொது விநியோகப் பொருட்கள் இருப்பு எடை, விற்பனை விபரம், மக்கள் பயன்பெறும் மொத்த குடும்பத்தினர் எண்ணிக்கை, நியாய விலை கடை செயல்படும் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் போன்ற விவரங்களையும் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சங்ககிரியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 1.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிளை நூலகத்தின் கட்டுமான பணியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தேவண்ண கவுண்டனூர் பகுதியில் ரூ 5.36 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் தரமாக உரிய கால அளவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு தேவையான ஆலோசனையை இந்த ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.



