நாகர்கோவில், ஜன. 26 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த 29 வயதான வாலிபர் ஜேசிபி டிரைவராக உள்ளார். இவருக்கும் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்திற்கு பின் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் அந்த இளம்பெண் ரூபாய் 35 ஆயிரத்தை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, புதிய செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அந்த வாலிபர் ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் இருவரும் பேசி நேரிலும் சந்தித்து உரையாடி வந்தனர். தை மாதம் திருமணம் நடைபெற திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென கடந்த மாதம் அந்த இளம்பெண் வாலிபரை பிடிக்கவில்லை என திருமணத்தை ரத்து செய்ய வீட்டாரிடம் கூறியுள்ளார். இளம்பெண் திருமணத்திற்கு சம்மதிக்காததால் திருமணத்தை ரத்து செய்தனர். இதை அடுத்து வாலிபர் வாங்கி கொடுத்த செல்போனை திரும்ப கொடுத்துவிட்டு, தான் கொடுத்த 35 ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு இளம்பெண் கேட்டுள்ளார். வாலிபர் பணத்தை திருப்பி கொடுக்காதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொட்டாரம் பகுதியில் வாலிபர் நிற்கும் போது காரில் வந்த சிலர் அந்த வாலிபரை தாக்கி அவர் செல்போனை பறித்தனர். பின்னர் அவரிடம் ஜிபே பாஸ்வேர்ட் நம்பரை கேட்டு மிரட்டி, அந்தப் பெண்ணின் நம்பருக்கு ரூபாய் 40 ஆயிரத்தை ஜிபே செய்துள்ளனர். பின்னர் செல்போனை கொடுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து வாலிபர் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட இளம்பெண் உட்பட கண்டால் தெரியும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண் தான் கூலிப்படையை ஏவி பணத்தை பறித்ததாக வாலிபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


