நாகர்கோவில், ஏப். 6 –
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ஈசானசிவம் என்ற ராஜா (32). கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கும் நாகர்கோவில் சைமன் தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜன் என்ற சந்தை ராஜன் (45) என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈசான சிவம் இரணியல் போலீசில் புகார் செய்து, சந்தை ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் ஈசான சிவம் மீது சந்தை ராஜன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தை ராஜன் தனது கூட்டாளியான லிங்கராஜா (43) என்பவர் உதவியுடன் ஈசான சிவத்தை சமரசம் பேச வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி ஈசான சிவம் நங்கூரான் பிலா விளை என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அவரை ரவுடிகள் இருவரும் தென்னந்தோப்புக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மேலும் ஜிம் கண்ணன் (45), ஐயப்பன், அஜித் மற்றும் கண்டால் தெரியும் சிலர் அங்கு நின்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் சந்தை ராஜன் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் பதிந்த வழக்கை வாபஸ் கேட்டு ஈசான சிவத்தை மிரட்டி உள்ளனர். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தை ராஜன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த ஈசான சிவத்தை தூக்கி சென்று அந்த பகுதியாக செல்லும் கால்வாயில் உள்ள பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் சந்தை ராஜன், காட்டு ராஜா, ஜிம் கண்ணன், ஐயப்பன், அஜித் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சந்தை ராஜன், ஜிம் கண்ணன் ஆகியோர் போலீஸ் சரித்திர பதிவேட்டில் ஏ ப்ளஸ் பிரிவு ரவுடிகளாகவும், காட்டுராஜா சி பிரிவு ரவுடியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


