நாகர்கோவில் ஆக 29
தமிழ்நாடு காங்கிரஸில் மிகவும் பிரபலமான முகங்களில் முக்கியமானவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.தேசிய அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே விஜயதரணிக்கு உண்டு. அதன் காரணமாக கடந்த தேர்தலிலும் அதற்கு முந்தைய தேர்தலிலும் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார்.
ஆனால் அப்போது எம்பி தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார் விஜயதரணி. ஆனால் அவரைவிட இளையவரான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு எம்பி சீட்டு ஒதுக்கப்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்தார். அதனை தொடர்ந்து சீனியரான தனக்கு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.ஆனால் அந்த பொறுப்பும் செல்வப் பெருந்தகைக்கு போனதைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு மாற்றப்படலாம் என தகவல் வெளியான நிலையில் டெல்லிக்குச் சென்று கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சித்து வந்தார். ஆனால் அப்போதும் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இப்படியாக காங்கிரஸ் கட்சியில் தனக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து பறி போனதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் பாஜகவில் ஐக்கியமாக திட்டமிட்டார்.
குறிப்பாக மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அவர் பாஜகவில் இணைந்தார். அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் உடனும், தமிழக பாஜக தலைவர்களுடனும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் தனக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் அமித்ஷாவிடம் நேரடியாகவே முறையிட்டதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தேர்தலும் முடிவடைந்து விட்டது. கட்சியிலாவது தனக்கு பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனக்கு பொறுப்பு வழங்க வேண்டும் எதிர்பார்த்துதான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன் என அண்ணாமலை முன்னிலையில் மேடையிலேயே பேசினார்.இது கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றியிடம் பேசிய விஜயதரணி ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தியை விஜய் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டும் என கேட்டதாகவும், உங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் தனியாகவே கட்சி ஆரம்பிக்கலாமே என ராகுல் காந்தி சொன்னதாகவும், அதற்குப் பிறகு கட்சி ஆரம்பித்ததாக சொல்லி இருந்தார்.



