நாகர்கோவில், ஜூன் 29 –
கன்னியாகுமரி அருகே மயிலாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற ரவி (50). இவர் டிராவல் ஏஜன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். தற்போது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் வழியாக கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ரவிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் முகநூல் வாயிலாக பேசி நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 3 பேருடன் ரவியின் வீட்டிற்கு வந்துள்ளார். ரவியின் வீட்டில் உள்ள பூஜை அறையில் சுமார் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம் வைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. ரவியின் கவனத்தை திசை திருப்பிய மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் பூஜை அறையில் இருந்த பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒன்றரை பவுன் தங்க மோதிரம் மற்றும் அவரது விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பி ஓடினர்.
நம்பிக்கை அடிப்படையில் வீட்டிற்கு அழைத்த நண்பரே கைவரிசை காட்டியதை கண்ட அதிர்ச்சியடைந்த ரவி இது குறித்து அஞ்சு கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் என் பேரில் போலீசார் மணிகண்டன் மற்றும் அடையாளம் தெரிந்த 3 பேர் மீது மோசடி, திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். முகநூல் போன்ற சமூக வலை தளங்களில் அறிமுகமான முன்பின் தெரியாது நண்பர்களை நம்பி வீட்டிற்கு அழைக்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.


