களியக்காவிளை, நவ. 14 –
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ரெஜினி முன்னிலை வகித்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே நடைபெற்ற குறுவட்ட, வட்டார, மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்த் பரிசுகள் வழங்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நயிமா, கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரிபாய், ஆசிரியைகள் லேகா, பினிசந்திரா, தன்னார்வலர்கள் அருள்சங்கர், அன்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.



