ஈரோடு, மே 14 –
தவெகவுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் 26 அதிமுக மாவட்ட செயலாளர்களை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை அவர் நியமனம் செய்து உள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதன் மாவட்ட செயலாளராக இது வரை முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் இருந்து வந்தார். இப்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக இதுவரை ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவருமான பெரியார் நகர் இரா மனோகரனை எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் நேரிலும் போனிலும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.



