ஈரோடு, ஏப். 7 –
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. 8 தொகுதிகளும் 195 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 7 லட்சத்து 40 ஆயிரத்து 222 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். தற்போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு கூடுதல் இணைப்புடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளோம். இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 47 ஆயிரத்து 197 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 16 ஆயிரத்து 778 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 158 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 984 வாக்குச்சாவடி மையங்களில் 2 ஆயிரத்து 379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளை உறுதி செய்துள்ளோம். பதற்றமான 55 வாக் குச்சாவடி மையங்களில் 73 வாக்குச்சாவடிகள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். 2 ஆயிரத்து 379 வாக்குச்சாவடிகளிலும் உள்ளேயும், வெளியேயும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். 8 தொகுதிகளுக்கும் தேவை யான மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிற 9 ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் சின்னங்கள் வெளியிடப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 06.04.2026 வரையிலான நிலவரப்படி வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ரூ.1.59 லட்சம் ரொக்கப் பணமும் ரூ.3.47 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.28.22 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.5200 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், ரூ.5.44 லட்சம் மதிப்புள்ள இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் என மொத்தம் ரூ.2.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



