குளச்சல், ஜூன் 19 –
மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குளோரி (60), மீன் வியாபாரி. நேற்று முன்தினம் மதியம் மீன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காய்கறி வாங்குவதற்காக திங்கள் சந்தைக்கு வந்தார். பஸ் ஸ்டாண்ட் அருகே காய்கறிகள் வாங்கும் போது அங்கு வந்த சுமார் 35 மதிக்கத்தக்க பெண் குளோரியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவரிடம் 10 பவுன் தங்க நகைகள் இருப்பதாகவும் அவசரமாக பணம் தேவைப்படுவதால் அதை தங்களிடம் தருகிறேன். அதற்கான பணத்தையும் இருக்கும் நகையும் தந்து உதவுங்கள் என்று கூறியுள்ளார். பேச்சுக்கு மயங்காத குளோரி நீங்கள் தருவது உண்மையான நகையா என எனக்கு எப்படி தெரியும் ? அதனால் நாம் அருகில் உள்ள தங்க நகை கடைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வோம் என்று கூறி நகைக்கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மர்ம பெண் மூதாட்டியிடம் நீங்கள் இங்கு நின்று கொள்ளுங்கள். நான் உள்ளே சென்று அதன் மதிப்பு குறித்து கேட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மர்ம பெண் நகைகள் ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் மதிப்பு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் உங்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகையைத் தாருங்கள் என்று கூறியுள்ளார். இது உண்மை என்று தம்பிய மூதாட்டி மீன் விற்று வைத்திருந்த ரூபாய் பத்தாயிரம், தன்னுடைய கழுத்தில் கிடந்த தங்கச் செயின், இரண்டு கம்மல் என சுமார் 4 பவுன் எடை கொண்ட தங்க நகைகளையும் கழற்றி மர்ம பெண் இடம் கொடுத்துள்ளார். இதை பெற்றுக்கொண்ட மர்ம பெண் போலி நகைகளை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரத்தில் மாயமாகிவிட்டார். பின்னர் மூதாட்டி மண்டைக்காட்டில் உள்ள உறவினர்களிடம் நகைகளைக் காட்டியுள்ளார். அப்போது இது திருட்டு நகையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பயந்து போன மூதாட்டி நகைகளைப் போலீசில் ஒப்படைத்து விடுவது என்று இரணியல் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குப் போலீசார் விசாரணையில் மூதாட்டி வைத்திருந்தது போலி நகை என்றும் மர்ம பெண் மூதாட்டியை ஏமாற்றியதும் தெரியவந்தது. போலீசார் மூதாட்டி கூறிய நகைக்கடைக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அதுபோன்று யாரும் எங்களிடம் வந்து நகையைக் காட்டவில்லை என்று நகைக்கடைக்காரர் கூறியுள்ளார். மேலும் நகைக்கடைக்குள் வந்து சும்மா நின்றிருப்பதும் பின்னர் சிறிது நேரம் கழித்து நகைக் கடைக்காரரிடம் பேசியது போன்று வெளியே வந்து நாடகமாடி நகையை மூதாட்டியிடமிருந்து பறித்துக் கொண்டு சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் நகைக்கடை மற்றும் சந்தைப் பகுதிகளில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளோரியிடம் பறிக்கப்பட்ட பணம் நகைகளின் மதிப்பு ரூபாய் 1.75 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.