நாகர்கோவில், நவ. 12 –
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மரண பள்ளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை
சுங்கான்கடை பகுதியில் உள்ள குளத்தின் மைய பகுதி வரை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியாகும். எனவே வில்லுக்குறி பேரூராட்சி முடியும் இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் தொடக்க இடத்திலும் மாநகராட்சி சார்பில் அலங்கார நுழைவு வாயில் அமைத்து வரவேற்பு பதாகை வைக்க சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு (பேரிக்கார்டு) வசதி செய்யப்படவில்லை. மேலும் இரவு நேரத்தில் இந்த இடத்தில் பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகளால் பார்க்க முடியாத வண்ணம் சாலையோரதில் விளக்குகளும் இல்லை போதிய வெளிச்சமும் இப்பகுதியில் இல்லை. எனவே வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரம் மட்டுமல்ல மழைக்காலங்களிலும் இருள் சூழ்ந்ததால் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் சாலையில் தோண்டப் பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் விழுந்து படுகாயத்துடன் உயிர் தப்பிய சம்பவத்தில் தடுப்பு அமைக்காமல் அதாவது பேரிகார்ட் வைக்காமல் கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இத்தனை பெரிய சம்பவங்கள் நடந்தும் மீண்டும் மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுபோன்று சாலையில் பள்ளங்கள் தோண்டும் போது முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக இப்பகுதியில் பேரிகார்டு அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



