குளச்சல், ஆக. 23 –
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆண்டனி (42). சிஆர்பிஎப் வீரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப் ஆண்டனி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் வேலைக்கு செல்வதாக திரும்பி சென்றுள்ளார். இதற்கிடையே வேளாங்கண்ணியில் ஜோசப் ஆண்டனி யாசகம் பெற்றுக் கொண்டிருப்பதை அவரது நண்பர்கள் பார்த்து உள்ளனர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று ஜோசப் ஆண்டனியை மீட்டு வந்தனர். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதற்காக உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருந்தனர். ஆனால் மறுநாள் காலை அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.
உறவினர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜோசப் ஆண்டனி வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தும் மருந்து பாட்டிலும் கிடந்தது. உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசப் ஆண்டனி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


