நாகர்கோவில், ஜூன் 20 –
கன்னியாகுமரி சுற்றுலா தலத்தினை மேம்படுத்துவது குறித்து, துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப், கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி சுற்றுலா தலமானது உலக முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளதோடு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இச்சுற்றுலா தளத்தினை மேலும் மேம்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நல்ல சூழ்நிலையில் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் வெளிநாடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் உணவு வகைகள் தரமானதாகவும், இவற்றின் விலைகள் ஒரே மாதிரியாக இருப்பதை வருவாய் கோட்டாட்சியர், காவல் துறையினர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கண்காணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கடைகளை முறைப்படுத்தி, ஒப்பந்ததை மீறி பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வரும் கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் வைத்திருக்க அனுமதி பெற்றவர்கள், கடற்கரை சாலையில் இருபுறங்களிலும் கடைகள் வைத்து, சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நெருக்கடி ஏற்படுத்தும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவதோடு, தற்போது பயன்பாட்டில் இல்லாத உணவக வளாகத்தினை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பாதுகாப்பான உணவு வகைகளை விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறினார்.
தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உணவு வளாகம், சிறுகடைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சாலை ஓரங்களில் அனுமதியில்லமால் கடைகள் வைத்திருப்பதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மேல்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்ருக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வுகளில் தமிழ்நாடு சுற்றுலா கழக பொது மேலாளர் லெட்சுமி பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் ஜான்சிராணி, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், உள்ளிட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



