மார்த்தாண்டம், டிச. 4 –
கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் மகள் திவ்யா மோள் (18). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி ஃபார்ம் படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி கல்லூரி சென்றவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர் காதலனுடன் மாயமானது தெரிய வந்தது. இதை அடுத்து திவ்யா மோளின் தந்தை மகளை கடத்தி சென்றதாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கு இடையே நேற்று மாலையில் மாயமான கல்லூரி மாணவி திவ்யா மோள் தனது காதலன் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கடல் தொழிலாளி டாரஸ் (24) என்பவருடன் கடையாலுமூடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசார் இருவரிடம் விசாரணை நடத்திய போது இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலித்தது தெரிய வந்தது.
காதலுக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர். மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்ததால் போலீசில் தஞ்சம் அடைந்ததும் தெரிந்தது. போலீசார் இருதரப்பு பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவி காதலனுடன் செல்வதாக உறுதியாக கூறி, திவ்யா மோளின் பெற்றோர் அளித்த நகைகள் மற்றும் பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் ஆகியவற்றை திருப்பிக் கொடுத்துவிட்டு காதலனுடன் சென்றார்.


