களியக்காவிளை, மார்ச் 12 –
தேசிய அறிவியல் விருதுக்கு களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இம்மாணவரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மாணவர்களுக்கு தேசிய அறிவியல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது அறிவியல் மாதிரிகளை மேம்படுத்த ஊக்கத் தொகையாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் அதிக நாட்டம் கொண்ட இப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் பென்பின் ஸ்மார்ட் ஹெல்மெட் என்ற புதுமையான அறிவியல் கருத்துருவுக்காக இவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவரை பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ், இவ்விருதுக்கான பள்ளியின் பொறுப்பாசிரியர் லிபேன்சிலி மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.



