நீலகிரி. ஏப்ரல். 10.
கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம் கோத்தகிரி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகும். கழிவு நீர், ஆக்கிரமிப்பு, போன்ற பல பிரச்சனைகளால் சீரழிந்து வரும் இந்த சதுப்பு நிலம் தற்போது கட்டிட கழிவுகளின் இருப்பிடமாக உள்ளது. முன்பு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இத்தகைய கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தற்போது கட்டிட கழிவுகள் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் இந்த சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகிறது. இந்த சதுப்பு நிலம் குழந்தைக்கு தாயின் மார்பகம் எவ்வளவு முக்கியமோ அது அதுபோல சதுப்பு நிலங்கள் மக்களுக்கு குடிநீர் தரும் முக்கிய நிலப்பகுதியாகும். மேலும் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சி பூமியை பாதுகாக்கிறது. இத்தகைய சதுப்பு நிலத்தை நம்பி நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. உலக அளவில் இதுபோன்ற சதுப்பு நிலங்களை காப்பதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நமது நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக மாவட்ட அளவில் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வளவு இருந்தும் இந்த சதுப்பு நிலத்தில் சில சமூக விரோதிகள் கட்டிடக்கழிவுகளை லோடு லோடாக கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியரிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள் புகார் மனு அளித்துள்ளார். கோத்தகிரி நகர பஞ்சாயத்து தலைவர் திருமதி. ஜெயக்குமாரி அவர்கள் இது குறித்து கூறும்போது காவல்துறை உதவியுடன் இது போன்ற குப்பைகளை கொட்டுபவர்களை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.



