நீலகிரி. ஏப்ரல். 19.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் ரேஸ்கோர்ஸ் மைதானம் அமைந்துள்ளது. சுமார் 54 ஏக்கர் பரப்பிலான இந்த மைதானத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்திருந்தது. ஆண்டுதோறும் இந்த மைதானத்தில் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம் இந்த நிலையில் பல கோடி ரூபாய் குத்தகை பாக்கி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி மேற்படி ரேஸ்கோர்ஸ் நிலத்தை வருவாய்த்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 54 ஏக்கர் கொண்ட ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி தோட்டக்கலை துறையினர் இந்த மைதானத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ரூ. 70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



