ஊட்டி. டிச.23.
மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது மிதமான காலநிலை கொண்ட கோத்தகிரி பகுதியில் கடந்த மாதம் வரை அதிகமான கேரட் பயிர் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதமாக மற்ற காய்கறிகளை விட கேரட் விலை மண்டிகளில் ரூ. 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கேரட் வெளி மாநிலங்கள் உட்பட பாம்பே, கல்கத்தா வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
நிலையான விலை தொடர்ந்து கிடைக்கும் என்ற நோக்கில் விவசாயிகள் அதிகமாக கேரட் பயிரிட்டு தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் திடீரென ரூ.40 முதல் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கேரட் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேரட் அதிகமாக விளைச்சல் ஏற்பட்டதால் கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், ஏற்றுமதி, வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை என கோத்தகிரி பகுதி கேரட் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.