2 மின்கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில், செப்.11:
திருவனந்தபுரத்தில் இருந்து தோல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற கண்டெய்னர் லாரி, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நேற்று காலை 6 மணியளவில் வந்தபோது விபத்தில் சிக்கியது. வளைவான சாலையில் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டதுடன், கண்டெய்னர் கவிழ்ந்ததில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் உடைந்தன. மேலும், அருகில் இருந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து சேதமடைந்தது.
விபத்து நடந்த நேரத்தில் சாலையில் வாகனங்களோ, பொதுமக்களோ செல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மிகப்பெரிய கண்டெய்னர் என்பதால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. இதையடுத்து நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கண்டெய்னரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக நாகர்கோவில் எம்.எஸ். சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



