சென்னை, ஜூலை 20 –
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வை வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காக, முதல் முறையாக ‘சக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை’ பிரச்சாரத்தின் கீழ் இந்த சக்ஷம் திட்டம், வறுமை கோட்டுக்கு கீழ் அளவில் உள்ள பெண்களின் பொருளாதார திறனை வெளிக்கொணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க விழாவை ‘தமிழ்நாடு ஊரக இன்குபேஷன் மற்றும் ஸ்டார்ட் அப் எனேப்லர்’ அமைப்பு நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியும் டி .என்.ரைஸ் – ன் தலைமைச் செயல் அதிகாரியுமான வி.ஆர். சுப்புலட்சுமி , சந்தைப்படுத்தல் மற்றும் முதலீட்டாளர் கல்விப் பிரிவு துணைத் தலைவர் மம்தா முதலியார் வைத்யா ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் தொடங்கும் இந்த ‘சக்ஷம்’ திட்டம், நீண்ட கால பொருளாதார உருவாக்கத்தை ஊக்குவிப்பதையும், உள்ளூர் சமூகங்களுக்குள் விழிப்புணர்வுடன் கூடிய முதலீட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய வி.ஆர். சுப்புலட்சுமி, ,”தமிழ்நாட்டில் அடிமட்ட அளவிலான பொருளாதார மாற்றத்திற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நீண்டகாலமாக முதுகெலும்பாக இருந்து வருகின்றன.
நமது பெண்கள் தங்களுடைய கூட்டு வலிமையின் மூலம் நிறுவனங்கள், சேமிப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்கியுள்ளனர். சக்ஷம் திட்டம் இந்த பயணத்தை சேமிப்பதில் இருந்து முதலீடு செய்வதை நோக்கி ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது. சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முறையான முதலீட்டாளர் கல்வி மற்றும் நேரடி ஆதரவிற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், இத்திட்டம் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை முறையான முதலீட்டு வழிகளில் செலுத்தவும், அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உருவாக்க உதவும்,” என்று கூறினார்.



