கோவை, ஆக. 05 –
கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஜே.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் 2 ஆம் ஆண்டு மாணவர்களான சஞ்சய் கிருஷ்ணன் மற்றும் பரத் ராஜ் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் Agentic AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “ஜேசிடி ஏஜென்டிக் எ ஐ ஸ்மார்ட் கேம்பஸ் இ ஆர் பி என்ற புத்தாக்கத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். மனித தலையீடு இல்லாமல் நிர்வாகப் பணிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் வகையில், முதற்கட்டமாக 10 தன்னாட்சி எ ஐ முகவர்கள் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் Multi-Agent AI, LLMs,RAG மற்றும் Generative AI போன்ற நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவு, கட்டண மேலாண்மை போன்ற வளாக நிர்வாகப் பணிகளுடன், ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனுக்கு ஏற்ப தனிப்பயன் படிப்புக் குறிப்புகள் மற்றும் பயிற்சி வினாக்களை வழங்கும் ‘Personalized Learning Engine’ சிறப்பம்சமும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இப்புதுமையான முயற்சியைப் பாராட்டிய கல்லூரி நிர்வாகம், திட்டத்தின் அடுத்த கட்டமாக 150 AI முகவர்களுடன் இயங்கும் முழுமையான அமைப்பை உருவாக்க உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் கல்வி, நூலகம், விடுதி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து வளாகச் செயல்பாடுகளும் ஒருங்கிணைந்த நுண்ணறிவுத் தளமாக மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் இந்த புதுமையான முயற்சியைப் பாராட்டிய ஜே.சி.டி. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கெளதமன் ராஜமாணிக்கம், செயலாளர் ஆர்.துர்காசங்கர் மற்றும் முதல்வர் டாக்டர் எஸ்.மனோகரன், துறை தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் திட்டத்தின் அடுத்த கட்டமாக 150 AI முகவர்களுடன் இயங்கும் ஜேசிடி ஏஜென்டிக் எ ஐ ஸ்மார்ட் கேம்பஸ் இ ஆர் பி அமைப்பை உருவாக்க கல்லூரி முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.



