போகலூர், செப். 13 –
ராமநாதபுரம் தேவிபட்டணம் சாலையில் அமைந்துள்ள வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேலுமாணிக்கம் அரங்கத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் துணைத் தாளாளர் பார்த்தசாரதி மற்றும் செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் செந்தில் ராஜன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேரூரையில்:
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என, பாட்டுப் புலவன் பாரதி பாடி, பல்லாண்டுகள் ஆகிவிட்டன. மெல்ல, மெல்ல பெண்கள் சமூகம் மண்ணிலிருந்து விண்வெளி வரையில் முன்னேறி வருவது கண்கூடு.
இதை மாணவிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றத்தையும் பல வெற்றிகளையும் பெற குறிக்கோள் உடன் முன்னேறி செல்ல வேண்டும். மேலும் சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பை பெற முயலவேண்டும். இன்றை சூழலில் இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்பும் வலைதளப் பக்கங்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். புத்தகங்கள் வாசியுங்கள். புத்தகத்தை கையில் எடு! அறியாமையை தீயில் இடு என்று ஆலோசனை வழங்கினார்.
பின்னர் 168 இளங்கலை மாணவிகளுக்கும் 33 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கி பாராட்டினார். விழாவில் வேலுமாணிக்கம் அறக்கட்டளை உறுப்பினர்களான தேவகி மனோகரன், டாக்டர் முத்துக்குமார், டாக்டர் பத்மாவதி முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் ரஜனி வரவேற்புரையாற்றினார். பட்டங்கள் பெற்ற 201 பட்டதாரிகள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இவர்களில் 16 மாணவிகள் பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்து தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவிகள் நன்றி கூறினர்.



