ராமநாதபுரம், மார்ச் 18 – மதுரையைச் சேர்ந்த நகைக்கல் வியாபாரியை ராமநாதபுரம் வரவழைத்து நம்பிக்கை மோசடி செய்து ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக் கல் பறித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தங்க ஆபரணங்களில் பதிக்கும் உயர் ரக நகைக்கல்
வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இவர் தன்னிடம் விலை மதிப்பற்ற 7 கிராம் உயர் ரக ரத்தினக்கல் ரசீதுடன் விற்பனைக்கு உள்ளதாக சிவகாசியை சேர்ந்த நகைக்கல் தரகர் ஜாகிர் என்பவரிடம்
கடந்த ஜன. 24 ல் தகவல் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்
திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை முனியசாமியிடம் ஜாகீர் அறிமுகப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து ரவி, அபுதாஹிருடன் சேர்ந்து கொண்டு முனியசாமியை ராமநாதபுரம் வரவழைத்தனர். இருவரின் அழைப்பின் பேரில் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே கீழக்கரை ரயில்வே கேட் பகுதிக்கு முனியசாமி வந்தார். அப்போது அங்கு நின்ற 7 பேர் முனியசாமியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.60 லட்சம் உயர் ரக ரத்தினக்கல், அதன் ரசீது, போன், ரூ.15 ஆயிரத்தை அச்சுறுத்தி பறித்து சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசில் முனியசாமி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து துரித விசாரணை நடந்தது. இதில்
தேனி மாவட்டம் பெரியகுளம் அபுதாஹிர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, முஹமது அசாருதீன் முஹமது நௌபல், தூத்துக்குடி முத்தையாபுரம் முத்துசெல்வம்,
தூத்துக்குடி
தாளமுத்து நகர் கா. கனகராஜ், கரு.கனகராஜ், தூத்துக்குடி அத்திரமரப்பட்டி ராஜா ஜோஸ்குமார்
ஆகியோர் முனியசாமியை மிரட்டி பறித்துச் சென்ற ரூ.60 லட்சம் ரத்தினக்கல், செல்போன், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர். இவர்கள் 7 பேரையும் கைது செய்து, உடமைகளை துரிதமாக மீட்ட தனிப்படையினரை எஸ்பி சந்தீஷ் பாராட்டினார்.



