தஞ்சாவூர், ஏப்ரல் 27 –
தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சி காலத் தில் வெளியிடப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோவில் தேர் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சாவூரை சேர்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீதாராமன் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழக தேர்கள் எல்லாம் திராவிட பாணி அமைப்பில் தான் இருக்கும் திருத்தேர்கள் பற்றி கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்களைத் தவிர காசுகளிலும் தேர் சின்னம் குறித்து மன்னர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த காசுகள் அனைத்தும் கோவில் தேர் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் திருவிழா அன்று வெளியிடப்பட்டிருக்கலாம்.
பெரும்பாலும் விஜய நகர ஆட்சியின் கீழ் நாயக்கர் மன்னர்கள் அதிகமாக திருத்தேர் வடிவங்களை பல வகையான காசுகளில் பொறித்து வெளியிட்டுள்ளனர். மேலும் சோழ மண்டலத்தில் கிடைத்துள்ள தேர்சின்னம் பொறித்த இருவகையான காசுகள் உள்ளன.
தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு வகை காசுகளிலும் உள்ள தேர் சின்னங்கள் தஞ்சாவூர் நாயக்கர் காலத்தில் சார்ந்தவை. இந்த இரு காசுகளும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தேர் தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்களாக கருதப்படுகிறது.
இதில் ஒரு காசில் முன்பக்கத்தில் வலது பக்கம் நோக்கி அமர்ந்திருக்கும் காளை உருவம் உள்ளது. காளையின் மேல் சூரியன் சந்திரன் உருவம் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் தேர் உள்ளது. செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட அந்த காசின் எடை 2.3 கிராம். மற்றொரு காற்றில் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்துள்ளார். பின்பக்கத்தில் தேர் காணப்படுகிறது. இதுவும் செம்பு உலோகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 0.64 கிராம் என்றார்.



