நாகர்கோவில், மார். 12 –
கிள்ளியூர் சட்டமன்றத்துக்குட்பட்ட கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் குமார் என்பவர் சென்னை, வியாசர்பாடி பணிமனையில் முதுநிலை நடத்துநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24.10.2024 அன்று பணியிலிருந்த போது பயணி ஒருவர் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெகன் குமார் உயிரிழந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் 11ம் வகுப்பு மற்றும் 9 வகுப்பு படிக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே உயிரிழந்தவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வாரிசு பணிக்கான பதிவு மூப்பு பட்டியலில் இருந்து விலக்களித்து, குடும்ப சூழ்நிலை காரணமாக சிறப்பினமாக கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலத்தில் ஜெகன் குமார் மனைவி எம்.ஆர்.சோனா என்பவரின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று எம்.ஆர்.சோனாவுக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கு இளநிலை உதவியாளராக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் முன்னிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பணிநியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண் இயக்குநர் எஸ்.நடராஜன், பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், துணை மேலாளர் (வணிகம்) மகேஷ் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



