நாகர்கோவில், ஏப். 7 –
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவட்டார் அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அவர் கூறியதாவது: குறிப்பாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று வர ஏதுவாக, தரமான சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க நிழற்குடைகளும், போதிய குடிநீர் வசதிகளும் மேற்கொள்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அறைகளில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் மின்விளக்குகள் மற்றும் தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் பொதுக்கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



