சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சித்திரை மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.இதனை முன்னிட்டு காலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 5.40 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் வரும் மே 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் இரவு 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், மே 7ம் தேதி புதன்கிழமை இரவு சுவாமி, அம்பாள்,நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நடு இரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், மே 8ம் தேதி வியாழக்கிழமை காலை நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜோதிராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, வக்கீல் காளிராஜ், ஜெயகுமார், பிஎல்ஜே சுந்தர் , ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.



