மார்த்தாண்டம், ஜூன் 8 –
களியக்காவிளை அருகே உள்ள குளப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (47). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குழித்துறையில் சுற்றுலா மற்றும் டிராவல்ஸ் கன்சல்டன்சி நடத்திவரும் சத்யகலா (38) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து ஜெபராஜ் தனக்கு தெரிந்த 8 பேரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சத்தியகலா 8 பேரிடமிருந்து ஜி பே மூலம் ரூ.20 லட்சத்து 20 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து 8 பேரும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சென்ற சில நாட்களிலேயே அவர்களுக்கு விசா முடிந்து விட்டதாக கூறி இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது சத்திய கலா நிரந்தர விசா பெற்றுக் கொடுக்காமல், தற்காலிக விசாவில் 8 பேரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி பண மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து ஜெபராஜ் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போலி விசா அளித்து பணம் பெற்றதாக சத்தியகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


