ஈரோடு, ஜூன் 4 –
ஈரோடு நாச்சியப்பா வீதியில் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ஈரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது போலீசார் விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக போதை மாத்திரை வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையொட்டி ஈரோட்டை சேர்ந்த இருந்த கௌரிசங்கர், முகமது ஜாமில், தீபக், விக்னேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள போதைக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
அதேபோல சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சுஷ்மிதா (22), அரவிந்த், கவியரசு, ரவி ஆகியோர் ஆன்லைன் மூலம் வெவ்வேறு முகவரிகளை கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி சித்தோடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையொட்டி இந்த இரு சம்பவங்களிலும் இளம்பெண் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



