தேனி, ஏப். 16 –
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சோனியா காந்தி, தனது கணவர் ராஜ்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சோனியா காந்தி – ராஜ்குமார் தம்பதியருக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரூபா ஸ்ரீ (16), கோகுல்நாத் (9) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்டு, சான்றிதழ் பெற வரும் பொதுமக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு சான்றிதழ்கள் வாங்கித் தருவதாக கூறப்படுகிறது. மேலும், சில கிராம நிர்வாக அலுவலர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து, அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையொப்பங்களை போலியாக பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்கி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனுடன், சான்றிதழ் தேவையுடன் அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆதரவற்ற பெண்கள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொந்தரவு செய்து, தனது விருப்பத்திற்கு இணங்க வற்புறுத்தியதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை குறித்து வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், தனியாக வசித்து வந்த சோனியா காந்தியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அருவாமனையால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார்.



