ஈரோடு, மார்ச் 23 –
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் திருவிழா நாட்டின் பெருவிழா என்ற தலைப்பில் வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை என்பது குறித்து வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அவர் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்த பேரணியினை துவக்கி வைத்தார். இதில், மகளிர் உதவிக்குழுவினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கையில் ஏந்தியபடி “நம் வாக்கு நம் நாட்டின் முன்னேற்றம்”, “உங்கள் வாக்கு உங்கள் உரிமை”, “நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்”, “வாக்கு என்பது கடமை அதை தவற விடாதீர்கள்”, “வாக்களிப்போம் ஒன்றாக வளர்ச்சி அடைவோம்”, “வாக்களிப்போம் நல்ல அரசை உருவாக்குவோம்”, “ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்று வழியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
இப்பேரணியானது மாவட்ட கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 350 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். மேலும் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் செம்பருத்தி குழுவினரின் தேர்தல் தொடர்பான கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டார். தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்தும் மற்றும் ‘தேர்தல் அரசன்” எனப் பெயரிடப்பட்ட ஈரோடு மாவட்ட தேர்தல் அடையாளத்தின் முன்பாக வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, மாவட்ட தேர்தல் அவர் தேர்தல் தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார்.
இதன் பிறகு கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் உமா சங்கர் குப்தா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையமான கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறை, தபால் வாக்கு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கும் எண்ணும் இடங்கள், கழிப்பறை, குடிநீர், அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து கோபிசெட்டிபாளையம், நான்கு ரோடு பகுதியில் பறக்கும் குழுவினர் வாகன சோதனையில் மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



