நாகர்கோவில், ஜன. 24 –
குமரி, கோதையாற்றில் முதலை நடமாடுவதாக 4 வீடியோக்கள் வெளியானது. இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பு சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து அதிமுக சார்பில் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இன்று ஆற்று பகுதியிலும் , சுற்றுலா படகு சவாரி மேற்கொள்ளும் பகுதிகளிலும் மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு ஆய்வு மேற்கொண்டார். படகு சவாரி மேற்கொள்ளும் பகுதியிலும், ஒருநடக்கல் பாலத்திற்கு முற்பகுதியிலும் முதலை செல்லாமல் இருக்க தடுப்பு வலை அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கவும், மக்கள் குளிக்கும் படித்துறைகளில், மக்கள் பாதுகாப்பாக தண்ணீரில் இறங்கி குளிக்க வசதியாக தடுப்பு வலைகள் அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக முதலை தொடர்ந்து வந்துசெல்லும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். ஆற்றில் மிதவை கூண்டு வைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.



