தஞ்சாவூர், மே 25 –
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் மட்டுமே இருந்து வந்த நிலையில் கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் எஸ்.டி.சோமசுந்தரம் (தஞ்சாவூர்) வருவாய்த்துறை அமைச்சராகவும், அழகு திருநாவுக்கரசு (ஒரத்தநாடு) உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தனர்.
இதன் பின்னர் 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி மணி, (கும்பகோணம்) வணிக வரித்துறை அமைச்சர் சி.நா.௴. உபயதுல்லா ( தஞ்சாவூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் மத்திய நிதித் துறை இணை அமைச்சராக எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் என மொத்தம் 3 பேர் ஒரே நேரத்தில் அமைச்சர்களாக இருந்தனர். இதையடுத்து 2011-2016 அதிமுக ஆட்சியிலும் 2021 திமுக ஆட்சியிலும் ஒரு அமைச்சர் மட்டுமே இருந்தனர்.
தற்போது தவெக ஆட்சியில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். கும்பகோணம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ர.வினோத் வேளாண்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்ற ஏ எம் ஷாஜகான் சிறுபான்மை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
பாபநாசம் தொகுதியில் ஏற்கனவே 2016ல் அதிமுக ஆட்சியில் இரா.துணைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 2020 இல் கொரோனா தொற்றால் காலமானார். இவருக்கு அடுத்து பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்றதன் மூலம் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2 அமைச்சர்கள் கிடைத்துள்ள நிலையில் மக்களிடையே எதிர்பார்ப்புகளும் மேலோங்கி உள்ளன.



