நாகர்கோவில், மே 18 –
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் காலி மனைகள் உள்ளன. இந்த பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் இடங்களில் மாலை வேலைகளில் ஏராளமான கும்பல்கள் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. வடசேரி போலீசாரும், ரயில்வே போலீசாரும் தொடர்ந்து எச்சரித்தும் ரோந்து பணிகளில் ஈடுபட்டும் கூட இதை கட்டுப்படுத்த முடியவில்லை. சில சமயங்களில் போதையில் இந்த கும்பல் தண்டவளங்களில் கற்களை வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடந்து, குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் கும்பல் கும்பலாக அமர்ந்து அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறு நேரத்தில் கைகலப்பாக மாறி, இதில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அந்த கும்பல் அங்கு இருந்து தப்பியது.
சம்பவம் அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். படுகாயமடைந்த ரமேஷ் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர பிரிவில் உள்ளார். ரமேஷை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


