நாகர்கோவில், மே 20 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு 44 வது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் சாக்கடையும் சகதியுமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்ஸி லதா அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள மழை நீர் வடிகால் ஓடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, எதனால் இந்த அடைப்பு ஏற்பட்டது என கேட்டறிந்து மழைநீர் வடிகால் ஓடைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கவும், ஓடைகளில் குப்பைகளையும், வேண்டாத பொருட்களையும் போடுவதை தடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும், உடனடியாக அடைப்பை சரி செய்து மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
உடன் மாநகர நல அலுவலர் டாக். சரோஜா, உதவி செயற்பொறியாளர் பிருந்தா, உதவி செயற்பொறியாளர் சந்தோஷ் குமார் மற்றும் சுகாதார அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் தேன்மொழி, முத்து மணி, தொழில்நுட்ப உதவியாளர் நிஷ்மா மற்றும் மாநகர அதிகாரிகள், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



