கன்னியாகுமரி, அக். 27 –
மருங்கூரில் சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களில் முருகப்பெருமான் சூரனை வதை செய்யும் சூரசம்ஹார விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் வெகு விமர்சையாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முருகன்குன்றம், தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
அதில் குறிப்பாக மருங்கூரில் அமைந்துள்ள அருள்மிகு மருங்கூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி புதன்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.
அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு மயூரா வாகனத்தில் போர் கோல சேவை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு பஜனை, 11 மணிக்கு திருப்புகழ் திரட்டு முற்றோதல் ஆகியவை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினர். மாலை 6:45 மணிக்கு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப்பெருமானின் வாகனத்திற்கு முன்பாக சிலம்பாட்டம், குஸ்தி, வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டு சாகசங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சூரன் மூன்று முறை தனது முகத்தை மாற்றி முருகப்பெருமானோடு போருக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் போரின் இறுதியில் முருகன் சூரனை வேல் கொண்டு குத்தினார். இதில் சூரன் சரிந்து கீழே விழுந்தார். சூரன் கீழே விழுந்ததும் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்தோடு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என கோஷமிட்டனர்.
பின்னர் சூரனின் உடல் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏராளமான வானவேடிக்கைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சூரனை வதம் செய்த முருகனுக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் பக்தர்கள் கண்டுகளித்தனர் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அமர்த்தப்பட்டார். சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரத்தை மலை மீது அமர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
பின்னர், இரவு 7.45 மணிக்கு மூலவர் சிறப்பு வழிபாடு, எட்டு மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, 8:30 மணிக்கு சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், மருங்கூர், இரவிபுதூர் ஆபத்து காத்த அம்மன் சிங்க வாகனத்திலும் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது. பின்னர், செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி சீனிவாசன், மருங்கூர் பேரூர் அதிமுக செயலாளர் சீனிவாசன், அஞ்சுகிராம் பேரூர் செயலாளர் இராஜபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அஞ்சுகிராமம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



