குளச்சல், செப். 11 –
வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கு 16 வயதில் மகன் உள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி மாணவர் தனது நண்பருடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தந்தை மகனை கண்டித்துள்ளார்.
மேலும் மகனின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதுடன் புள்ளிங்கோ முறையில் வெட்டி வைத்திருந்த மகனின் தலை முடியை வெட்டி சீர்படுத்தினாராம். இதனால் வேதனை அடைந்த மாணவன் அடுத்த நாள் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தந்தை வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாலிடெக்னிக் மாணவரை தேடி வருகின்றனர்.


