ஈரோடு, மார்ச் 19 –
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்-தன்னார்வலர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகளையும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக ஏற்படுத்தினர்.
அதன் பொருட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், வீதி நாடகங்கள் நிகழ்த்துதல், பேரணிகள் செல்லுதல் என பல்வேறு தளங்களில் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கான பணியை மேற்கொண்டதற்காக மாவட்ட அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
இதனைப் பாராட்டும் விதமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாணவர்-தன்னார்வலர்களை வாழ்த்தி விருது வழங்க, கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் வாசுதேவன் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகிய அமைப்புகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசு பெற காரணமாக இருந்த அனைவரையும் கல்லூரியின் தாளாளர் சச்சிதானந்தன் பாராட்டினார்.



