மார்த்தாண்டம், ஜன. 8 –
திருவட்டாறு அருகே காங்கரை பகுதியை சேர்ந்தவர் பகவதி மகள் உத்தரசுந்தரி (30). இவருக்கும் மதுரை மாவட்டம் உச்சபரமேடு என்ற இடத்தை சேர்ந்த அசோக் பாண்டியன் மகன் ஹரிசங்கர் (32) என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹரிசங்கர் பெங்களூருவில் உள்ள ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் தந்தை அசோக் பாண்டியன் (65) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
திருமணத்தின் போது உத்தரசுந்தரிக்கு வரதட்சணையாக 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்ததாக தெரிகிறது. திருமணம் முடிந்த சில நாளிலேயே கணவர் ஹரிசங்கர், மாமனார் அசோக் பாண்டியன், மாமியார் சுப்புலட்சுமி, கணவரின் அண்ணன் விஷ்வா கணேஷ் ஆகியோர் உத்தரசுந்தரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் மாமனார் அசோக் பாண்டியன் உத்தரசுந்தரியின் பெற்றோருக்கு போன் செய்து வரதட்சணை கேட்டு மிரட்டி உள்ளார். இதை அடுத்து சில நாட்களில் உத்தரசுந்தரியின் நகைகளை கணவர் அடகு வைத்து செலவழித்து வந்ததாகவும், மேலும் ரூ. 10 லட்சம் வரதட்சணை வேண்டும் என கேட்டு கணவர் வீட்டிலிருந்து உத்தரசுந்தரியை துரத்திவிட்டார் என கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த உத்தரசுந்தரி வரதட்சணை குறித்து பத்மநாபபுரம் கோர்ட்டில் புகார் மனு அளித்தார். புகாரை விசாரித்த நீதிமன்றம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஹரிசங்கர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


