சங்கரன்கோவில், ஜன. 19 –
சங்கரன்கோவிலில் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக மற்றும் நகர கூடைப்பந்துக் கழகம் சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடந்தது.போட்டியை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து சங்கரன்கோவில், செங்கோட்டை, இடைகால், தென்காசி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, கடையம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடினர். இதில் செங்கோட்டை யூனைடெட் அணியினர் முதலிடம் பெற்றனர். கடையம் கேம்பிரிட்ஜ் அணியினர் 2ம் இடமும், சங்கரன்கோவில் நகர கூடைப்பந்து கழக அணியினர் 3ம் இடமும், சங்கரன்கோவில் லெஜென்ட் அணியினர் 4ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி செல்வம், தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈஸ்வரமூர்த்தி, திமுக நகர செயலாளர் பிரகாஷ், அவைதலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், மாணவரணி வெங்கடேஷ், ஐ டி விங்க் சிவசங்கரநாராயணன், முன்னாள் கூடைப்பந்து வீரர் மாரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சங்கரநாராயணன், துணை தலைவர் முப்பிடாதி, பொருளாளர் மூர்த்தி, நகர துணை தலைவர் குமார், முத்துக்குமார் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர், நகர கூடைப்பந்துக் கழகத்தினர் செய்திருந்தனர்.



