மார்த்தாண்டம், அக். 25 –
முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மழை தொடங்கிய நிலையில் பேரூராட்சி பழைய கட்டடங்களை இடித்து அகற்றியுள்ளனர். அதன் அருகே இருந்த சிறிய கட்டட பகுதியை தற்காலிக அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த கட்டடத்தின் அஸ்திவார கட்டுமானங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளும் மழை காரணமாக இதுவரை தொடங்க இயலவில்லை. தற்காலிக கட்டடத்தின் பெரும்பாலான அடித்தள அஸ்திவார பகுதிகள் பெயர்ந்து காங்கிரீட் தூண்கள் நிலத்தில் புதைந்து போகும் நிலையில் உள்ளது.
இந்தக் கட்டடத்தின் அருகே தான் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் மண்ணின் ஈரம் காரணமாக அந்த கட்டடத்தின் அஸ்திவாரம் பெருமளவு சேதமடைந்த நிலையில் அதன் கான்கிரீட் தூண்கள் புதைந்து கட்டடம் இடிந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் பேருராட்சிக்கு சொந்தமான சமூக நல கூட்டத்தில் தற்காலிகமாக பேரூராட்சி அலுவலகத்தை இயங்க செய்வது பொதுமக்களுக்கும் பேரூராட்சி ஊழியர்களுக்கும் பாதுகாப்பான நிலையை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தற்காலிக கட்டிடம் இடிந்து விடும் அபாயம் உள்ளதால் உடனடியாக பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அலுவலகத்தை இட மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது



