நாகர்கோவில் . பிப்.13-
தேசிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் விதை மசோதாவை ரத்து செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர்களை சீரழிக்கும் விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட வேண்டும், அணுசக்தி துறையில் தனியார் அனுமதிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று 12 ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் முன்னணி சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தாஸ், சிஐடியு இந்திரா மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திங்கள் நகர் கனரா வங்கி, தக்கலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மார்த்தாண்டம் கனரா வங்கி, ஆரல்வாய்மொழி தபால் நிலையம், ஈத்தாமொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சுசீந்திரம் தபால் நிலையம், கருங்கல் தபால் நிலையம், மேல்புறம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, குலசேகரம் கனரா வங்கி, திருவட்டார் தபால் நிலையம், கடையாலுமூடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கண்ணனாகம் ஸ்டேட் வங்கி, அருமனை ஸ்டேட் வங்கி முன்பு மறியல் போராட்டங்கள் நடந்தது.
14 இடங்களில் நடந்த மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் பஸ்கள் ஆட்டோக்கள் வழங்கும் போல் இயங்கியது. கடைகள் அனைத்தும் திறந்து இருந்தது. அதே நேரம் கேரளா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது.
வங்கிகளில் 3 சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிப் பணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி இயங்கியது. குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் அனைத்து பணிகளும் தொய்வின்றி நடந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு அடையவில்லை.



