மார்த்தாண்டம், ஜூன் 24 –
குழித்துறையில் மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்டிடத்தை பாரத் மாதா சேவா டிரஸ்ட் தலைவர் சுகுமாரன் ஜி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி, பி.எம்.எஸ் கொடியை மாநில தலைவர் வெங்கட் ராகவன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அம்பேத்கர், குருஜி, பாரத் மாதா உட்பட்ட படங்கள் திறக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.எம்.எஸ் அகில பாரத பொறுப்பாளர் துரைராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அகில இந்திய அளவில் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளிகளை கொண்ட சங்கம் பி.எம்.எஸ். உலக அளவில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ கூடிய சங்கம். வருகின்ற 13, 14, 15, 16 தேதிகளில் ஹைதராபாத் பிரிக்ஸ் அமைப்பில் பி.எம்.எஸ் சார்பில் மிக பெரிய மாநாடு நடக்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் இருக்கின்றன. சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. அந்த தொழிற் சாலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்பு சார தொழிலாளர் அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரம் உயர எல்லா செயல்களையும் செயல்படுத்த வேண்டும்.
ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்,முந்திரி ஆலை தொழிலாளர்கள் வேலை இழந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருகின்றனர். ஆகவே உடனே ரப்பர் தொழில் சாலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ரப்பர் விலை அரசு நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள், தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் ரப்பருக்கு கிலோ ரூ.250 என்று அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அது வரவேற்கத்தக்கது ஆனாலும் அந்த விலை உயர்த்தி வழங்க வேண்டும். அது போல தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.



