கிருஷ்ணகிரி, ஜூலை 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 269-வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் ஹீண்டாய் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் டி. ஹரிஷ் யாதவ் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் யாதவ மகாசபை கவுரவத் தலைவர் ஜிம் எம். சக்திவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் சி. ராஜியாதவ், கிழக்கு மாவட்ட மண்டல பொறுப்பாளர் சி. கோவிந்தராஜ், அதிமுக மத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நரேஷ் யாதவ், சி. அன்பு, பாஜக சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் பிரபு, தமிழக வெற்றி கழக மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, திருநாவுக்கரசர், குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக பூவரசன், சக்திவேல், மணி, மைக்கேல், சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று மாவீரன் அழகுமுத்துகோனுக்கு அஞ்சலி செலுத்தினர்.



