கன்னியாகுமரி, ஜூலை 15 –
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சின்னமுட்டத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கோவளத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் சிலுவை நகர் கடல் பகுதியில் இருந்து சுமார் 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை நாட்டுப் படகில் மோதி நிலைகுலைந்தது. அதில் நாட்டுப்படகில் இருந்த கோவளத்தை சேர்ந்த மோசஸ் மகன் ராஜா (36) என்பவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் ராஜாவை காப் பாற்ற முயன்றனர். ஆனால் கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இதுகுறித்து அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலில் விழுந்து மாயமான ராஜாவை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளூர் மீனவர்களுடன் தேடி வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் உடலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



