தென்காசி, மே 16 –
தமிழகத்தில் 2026ம் ஆண்டிற்க்கான சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் வாக்கு அளித்த, வாக்கு அளிக்காத மக்களுக்கும் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கி.மு.ராஜேந்திரன் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
ஏழைகளின் ஊட்டியாக கருதப்படும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏழை எளிய மக்கள் அதிக அளவில் வருகின்ற நிலையில் பழைய குற்றால அருவியில் வனத்துறை சார்பில் குளிப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக வருகின்ற நீரில் குளிப்பதற்கு இருபது ரூபாய் என்கிற கட்டணம் ஏற்புடையதல்ல. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் இங்கு வருகின்ற ஏழை எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தளத்தில் குளித்து செல்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தென்காசி தாசில்தார் மணிகண்டனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



