திண்டுக்கல், நவ.8 –
7வது உலக கோப்பை ஸ்கேட்டிங் ரோல்பால் போட்டிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 14 தேதி முதல் 18ஆம் தேதி வரை துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடும் வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் 12 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தீபக் ராஜா (24), பெண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த
மதுமிதா (26), மகதி ஆகிய 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மகதி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் விளையாட உள்ள தீபக் ராஜா மற்றும் பெண்கள் பிரிவில் பிரிவில் விளையாட உள்ள மதுமிதா ஆகிய 2 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றவர்கள். இதில் தீபக் ராஜா சின்னாளபட்டியை சேர்ந்த மளிகை கடை நடத்தி வரும் நாகரமேஷ் என்பவரின் மகன். இவர் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் படித்து புவியியல் முதுகலை பட்டம் பெற்றவர். மதுமிதா ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோழியப்பகவுண்டனுரை சேர்ந்தவர் சுப்பிரணி என்ற விவசாயின் மகள், இவர் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று தற்போது அதே துறையில் பி.எச்.டி. ஆராய்ச்சி (டாக்டர்) பட்டத்திற்காக படித்து வருகிறார்.
உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் 24 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் இடம் பெற்றிருப்பதும் அதில் குறிப்பாக 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்க நிர்வாகி சர்வதேச நடுவர் மாஸ்டர் எம். பிரேம்நாத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 14 – 18 ஆகிய தேதிகளில் துபாயில் உலகக் கோப்பை ரோல் பால் போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி சார்பாக விளையாட திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர் தீபக் ராஜா மற்றும் வீராங்கனை மதுமிதா ஆகியோர் தேர்வாகியுள்ள அவர்களை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் பாராட்டி போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் காந்தி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி. ஜெயராம் மற்றும் மாணவரின் தந்தை நாகரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.



