வேலூர், ஆகஸ்ட் 28 –
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் (CMC) சிகிச்சை பெறுவதற்காக வேலூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆற்காடு சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வருபவர்கள் தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் எப்போது பார்த்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வாகனங்களை எடுக்க முடியாதவாறு பூட்டு போட்டு அபராதம் விதிக்கின்றனர். இன்று சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை ஏற்றி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை கண்டித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: அனாதை பிணங்களை ஏற்றிச் செல்ல போலீசார் எங்களது ஆம்புலன்ஸ்களை இலவசமாக பயன்படுத்துகின்றனர். நாங்கள் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்தி வைத்து இருக்கிறோம். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பூட்டு போட்டதால் அவதி அடைந்து வருவதாக தெரிவித்தனர். பூட்டு போடப்பட்ட ஆம்புலன்ஸ் திடீரென நோயாளிகள் அழைப்பு வந்தால் என்ன செய்வது என்று வேதனை.



