தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 13 –
வடக்கு தாமரைகுளம் பண்ணையார் சமுதாய முத்தாரம்மன் திருக்கோயில் சார்ந்த பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவானது எட்டு நாட்கள் நடைபெறுகிறது. 7-ம் விழாவான நேற்று ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு அம்மன் வேதாள வாகனத்தில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி பூஜையுடன் ஏழகரம் பெருமாள் கோவில், மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில் சந்தன குடத்துடன் வடக்கு தாமரை குளம் நடராஜபுரம் பகுதிகளில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாகன பவனி நிகழ்ச்சியை திமுக வர்த்தகர் அணியின் மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரை பாரதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பண்ணையார் சமுதாய தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு தாமரை குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி தனசம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். எட்டாம் விழாவான வருகிற 19-ம் தேதி சாமிதோப்பு அருகே உள்ள அளத்தம்மன் என்ற பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் விழாவானது நிறைவு பெறுகிறது.



