கன்னியாகுமரி, ஜன. 16 –
ஆந்திர மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்தியநாராயணா (62). இவர் மனைவி ரமா (60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்ஸில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தப்பட்டது. பஸ்ஸில் இருந்தவர்கள் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் நடை பயற்சி செய்தனர்.
பின்னர் பஸ் புறப்பட தயாரானபோது ஐயப்ப பக்தர்கள் பஸ்ஸில் ஏற தொடங்கினர். சத்ய நாராயணாவும் ரமாவும் சாலையை கடந்து பஸ்ஸில் ஏற முயற்சித்தனர். இந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தம்பதிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி விட வீசப்பட்ட பாலகுருதி சத்யநாராயணா அவரது மனைவி ரமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக இரண்டு பேரையும் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தம்பதி மீது மோதிய வாகனம் குறித்த உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள ஏதாவது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணித்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.



