மார்த்தாண்டம், நவ. 20 –
குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே மேம்பாலம் ஆரம்பமாகிறது. இதன் ஒருபுறத்தில் வெட்டுவெந்நி வழியாக குழித்துறை செல்லும் ஏராளமான வாகனங்கள் செல்லுகிறது. அருமனை, கொல்லங்கோடு, ஆறுகாணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்களும் இந்த ரோடு வழியாக செல்வது வழக்கம். சமீபத்தில் புதிதாக விடப்பட்ட தாழ் தள பஸ்களும் செல்கிறது.
மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் செவ்வக வடிவத்தில் சுமார் அரை அடி ஆழத்திற்கு ரோடு திடீரென்று பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இது வழியாக செல்லும் டவுன் பஸ்கள் உட்பட வாகனங்கள் பழுதுபட்டது.
கார்களில் வருபவர்கள் இங்கு மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நள்ளிரவில் ஜேசிபி மூலம் இந்தப் பகுதியில் தார் போட்டு ஜல்லி போட்டு சீரமைக்கப்பட்டது.
பழுதடைந்த இந்த பகுதியில் ரோட்டின் கீழே செவ்வக வடிவத்தில் ஒரு ஸ்லாப் உள்ளது இது எதற்காக அமைக்கப்பட்டது? என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரித்த போது தெரியவில்லை. இதனால் நிரந்தரமாக இந்த ஸ்லாப்பை அகற்றவும் நெடுஞ்சாலைத்தறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



